துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்த அறிக்கையை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தவர் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மதுரை கிளையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.