குஜராத் கலவரம் : சமூக செயற்பாட்டாளருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு
குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரம்
சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002 குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

நிலுவையில் உள்ள விசாரணைக்கு ஆர்வலர் தீஸ்தா முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டது. இதனிடையே, 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது.
தீஸ்தாவுக்கு ஜாமீன்
இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.அதேநேரத்தில் குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தீஸ்தா செதல்வாத்தை அதிரடியாக சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. தீஸ்தா செதல்வாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி தீஸ்தா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து தீஸ்தா செதல்வாத் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தீஸ்தா செதல்வாத் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.