அசைவ உணவுக்கு தடையா ? "நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்க எப்படி முடிவு செய்யலாம்" - கொந்தளித்த நீதிபதி
குஜராத்தில் , கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் குஜராத்திலுள்ள வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜூனாகாத் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தெருவோரமாக அசைவ உணவை வழங்கும் தள்ளு வண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குத்தான் இந்த தடை என்று அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகவே அந்த அசைவ விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இறைச்சி கடைகளுக்கு இப்படி திடீரென அறிவிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்து சமூக வலைத்தளங்களில்விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் , அசைவ உணவுகள் விற்பதற்கு தடை விதித்து அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதோடு நிர்வாகத்தினர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், கடைகளை அடித்து நொறுக்கி தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்பு நடந்தது.. நகராட்சி ஆணையரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அவரிடம், பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய நீதிபதி "உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்களுக்கு அசைவம் பிடிக்காது, அதுதானே? மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த சாப்பாட்டைதான் சாப்பிட வேண்டும், அசைவ சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்?
நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னைக்கு அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா? என்று கேள்விகளை எழுப்பினார்..
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... நிச்சயம் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வயிற்றில் பாலை வார்ப்பது போன்ற தீர்ப்பையே நீதிபதி தருவார் என்று நம்பப்படுகிறது.