குஜராத் அரசு கொரோனா இறப்புகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
முதல் கட்ட கொரோனா பரவலின்போது தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வட இந்திய மாநிலங்கள் எதிர்பாராத பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிலும் குறிப்பாக குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கத்தின் தரவுகளில் மரணங்கள் குறைவாகவே காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குஜராத்தில் தற்போது உள்ள நெருக்கடியான நிலை தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், “குஜராத்தில் கொரோனா ஒரு சுனாமியைப் போல தாக்கியுள்ளது. இது மக்களுக்கும் கொரோனாவுக்கும் இடையேயான யுத்தமாக மாறிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் குஜராத் அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், “உண்மையான தரவுகளை மறைக்காமல் வெளியிடுவது அரசின் பொறுப்பு. அது மட்டுமே தவறான செய்திகள் பரவுவதை தடுக்க முடியும். உண்மையான நிலையை மறைப்பதனால் எந்த விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளனர்.