ஹெலிகாப்டரில் சென்று டவ்தே புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் மோடி!
குஜராத்தில் மாநிலத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானது. இந்த புயல் குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 17ம் தேதி நள்ளிரவு போர்பந்தரில் இப்புயல் கரையைக் கடந்தது. கனமழை மற்றும் புயல் காற்றால் குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும் பகுதிகள் சேதமாயின. புயல், கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் புயல் காற்றால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சாலையில் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி பவ்நகர் என்ற பகுதியிலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார். அந்த ஹெலிகாப்டரில் பிரதமருடன், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியும் உடன் சென்றிருந்தார்.
