ஜிஎஸ்டி கவுன்சில் விவகாரத்தில் அதிரடி உத்தரவுகளை வழங்கிய உச்சநீதிமன்றம்
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு வழங்கியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் இந்தியா முழுவதும் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்பதன் சுருக்கம்தான் ஜிஎஸ்டி வரியாகும்.
இதில் வரி விதிப்பு, அதில் ஏற்படும் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில்தான் பரிந்துரை செய்ய மத்திய, மாநில அரசுகள் இதனை மேற்கொள்ளும்.
இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியா ஒரு கூட்டாட்சி ஒன்றியம் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. இந்த கவுன்சிலின் முடிவுகள் என்பது கூட்டு ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால் ஒரு அமைப்பு மட்டும் கூடுதல் அதிகாரம் கொண்டு இருக்க முடியாது.
மேலும் இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால் ஒன்றிய , மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆலோசனையில் ஈடுபட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு இதுதான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.