ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது - தமிழக அரசு..!
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அளிக்க உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் அறிவிப்பு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர். இதன்பின் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து பேசியதாக கூறினர். நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
அரசியல் அமைப்பின் படி மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தபடி செயல்படவில்லை.
பலமுறை அழுத்தம் கொடுத்த பிறகும் அவர் நீட் மசோதாவை கிடப்பில் வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும்படி கோரினோம்.
அப்போது ஆளுநர் அனுப்பி வைப்பதற்கான கால வரையறை எதையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆளுநர் எந்த உத்தரவாதத்தையும் எங்களுக்கு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
தமிழக ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற மாண்பையும்,மக்களையும் மதிக்கவில்லை என் கூறினர். இதையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கபோவதில்லை என அமைச்சர்கள் தெரிவித்தனர்.