போஸ்ட்மேன் வேலைக்கூட இவர் செய்யல : ஆளுநர் ரவியை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நீட் விவகாரம், தேசிய கல்விக்கொள்கை, ஆளுநர் அதிகாரம், மத்திய மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க.. மக்களின் படிப்பை தடுக்க போடப்பட்ட சதித்திட்டம்தான் நீட். மாநில உரிமைகளை பறிப்பதற்காகவே நீட், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை கொண்டு வருகிறார்கள்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசு நிறைவேற்றிய ஒரு மாசோதாவை ஒரு நியமன ஆளுநர் திருப்பி இருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம். நாம் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.
இதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதுதான் மக்களாட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை நியமன பதவியில் இருக்கும் ஒருவர் தடுக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட.. மக்களை விட ஆளுநர் அதிக அதிகாரம் கொண்டவர் என்று நினைக்கிறாரா?
நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். போஸ்ட்மேன் வேலையை ஆளுநர் சரியாக பார்க்க வேண்டும் என்று ஆசிரியர் கீ வீரமணி கூறினார்.
அந்த போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.