அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஒரு மாநிலத்தின் அமைச்சர்வை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆளுநருக்கு எதிராக வழக்கு
பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுந்திருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆளுநரின் செயல்பாட்டுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரவை முடிவுப்படி, சட்டப்பேரவையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை. ஆளுநர் கேட்ட சில விவரங்களை பஞ்சாப் முதலமைச்சர் தரவில்லை என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் முன்வைத்தார்.
ஆளுநர் கட்டுப்பட்டவர்
ஆளுநர் கேட்கும் விவரங்களை தரவேண்டியது முதல்வரின் கடைமை என நீதிபதிகள் கூறியுள்ளனர். அரசியலமைப்பு ரீதியிலான பதவியில் உள்ள முதல்வர், கடமையை செய்யவில்லை என்று கூறி ஆளுநர் கடமையை தட்டி கழிக்க முடியாது. இருப்பினும் முதலமைச்சர் விவரங்களை தரவில்லை என்பதை காரணம் காட்டி அமைச்சரவை முடிவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், அரசியல் சட்ட ரீதியிலான பதவியில் இருக்கும் பண்பட்ட தலைவர்களால் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படாது என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், அவற்றை பண்பட்ட முறையில் தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகம் , புதுவை, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெருகின்றது.