தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் - பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அரசு அறிவுறுத்தல்

Government Instruction Foxconn
By Thahir Dec 25, 2021 09:35 AM GMT
Report

பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள்,

பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-12-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து ஆவன செய்யும் என தெரிவித்துப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியதன் அடிப்படையில்,

பெண் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன் தொடர்ச்சியாக 23.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில்,

தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ச.கிருஷ்ணன், காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி.தாமரைக்கண்ணன், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசுத் தரப்பில் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறு தெரிவித்தனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும்.

தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும்.

விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை தவறாமல் செயல்படுத்துவதாக பாக்ஸ்கான் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர்.

தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இத்தொழிற்சாலையை இவ்விடத்திலேயே விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் எனவும் உறுதியளித்தனர்.

சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில், ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் சுமார் 18,750 பேர்கள் தங்கும் அளவில், ரூபாய் 570 கோடி செலவில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 8 தொகுதிகளாக, 11 மாடிகள் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.

புதிய கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்பணிகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு பாக்ஸ்கான் நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.