இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிகளில் மாற்றம்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான லக்கேஜ் விதிகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
விமானம் அல்லது கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு வரும் பயணிகள் அதிக மதிப்புள்ள பொருட்களை வரியில்லாமல் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) பிப்ரவரி 1 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் செல்லுபடியாகும் விசாவுடன் வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் இப்போது 75,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வரியில்லாமல் கொண்டு வரலாம். முன்பு இந்த வரம்பு 50,000 ரூபாயாக இருந்தது.
அதேபோல் சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வரியில்லா வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 15,000 ரூபாயாக இருந்தது.
ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பும்போது குறைந்த அளவு தங்க நகைகளை வரியில்லாமல் கொண்டு வர அனுமதி வழங்கப்படும்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் ஒருவர் ஒரு புதிய லேப்டாப் அல்லது நோட்பேடை வரியில்லாமல் கொண்டு வர முடியும்.
வரியில்லா சலுகைகளை மற்ற பயணிகளுடன் பகிர முடியாது என்றும், சிகரெட், புகையிலை, ஆல்கஹால், தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள், டிவி போன்ற பொருட்கள் இந்த சலுகையில் சேராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாணயம் கொண்டு வருவதற்கான விதிகள் மாற்றமின்றி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.