அரசு பேருந்து தீ விபத்து , தெறித்து ஓடிய பயணிகள் : கோயம்பேட்டில் பரபரப்பு சம்பவம்

fire Chennai GovtBus koyambadu
By Irumporai Sep 29, 2021 08:20 AM GMT
Report

திருச்சியிலிருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்துள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதிக்கு அந்த பேருந்து வந்தவுடன் இன்ஜினில் கரும்புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் கொடுத்த தகவலின் பேரில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சேதம் அடைந்துவிட்டன.

புகை வந்தவுடன் பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிக்கப்படாததால் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.