அரசுஅதிகாரிகள் வெளியூர் செல்ல தடை : நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுமார் ஒரு லட்சம் பேர் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 9 மாதங்கள் வருவாய் இன்றி தவித்தனர்.
அந்த பாதிப்பில் இருந்து சுற்றுலா தொழிலாளர்கள் மீண்டு வராத நிலையில், தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் மீண்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடபட்டுள்ளன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் சுற்றுலா தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு முதற்கட்டமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரணமாக அளிக்கபட்டது.
இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்போடு இணைந்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 400 பேர் தற்போதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரளா மற்றும் கர்நாடக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதகாவும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்க்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தொடர்ந்துபேசிய அவர் வெளி மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் பணி புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வெளி மாவட்டத்திற்க்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.