பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை- தமிழக அரசு

Tamil nadu
By Yashini Jul 30, 2026 06:08 AM GMT
Report

தமிழக பள்ளி வளாகங்களில் அரசியல், மதம், ஜாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அரசின் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் ஜாதி சங்கங்களின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அரசு பள்ளிகளில் சிலர் ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானதை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கோ, இலவசமாகவோ வழங்கக் கூடாது.

இந்த தடை பள்ளி விடுமுறை நாட்களிலும் அமலில் இருக்கும். அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது.

மேலும், பள்ளி சுவர் மற்றும் வளாகங்களில் அரசியல், மதம் தொடர்பான போஸ்டர்கள், விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சின்னங்கள் வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை மீறி அனுமதி வழங்கும் தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.