பிஎஸ்பிபி சம்பவம் போல் நானும் எதிர் கொண்டேன்... நடிகை கௌரி கிஷன் பதிவால் அதிர்ச்சி...
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து மற்ற பள்ளிகளில் ஆசிரியர்களின் மீதான பாலியல் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னையில்செயல்படும் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர் மாணவ - மாணவிகளை ஆபாசமாக பேசுவது, சாதியை வைத்து மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக கௌரி கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.