ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது.
குறிப்பாக உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் தினம்தோறும் ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அரசு, ”ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலோ, ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.