கோட்டபய ராஜபக்சவுக்கு நிபந்தனையுடன் தற்காலிக அடைக்கலம் கொடுத்தது தாய்லாந்து அரசு...!
கோட்டபய ராஜபக்ச தற்காலிகமாக தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சி சற்று மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வந்த விலைவாசி உயர்வை சற்று குறைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடுகள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் மாளிகை சூறையாடல்
கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டபய ராஜபக்சவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலகினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் ஆவேசமாக உள்ளே புகுந்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோட்டபய ராஜபக்ச கப்பல் மூலம் தப்பி சென்றார்.
மாலத்தீவுக்குச் சென்ற கோட்டபய ராஜபக்ச
கோட்டபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ம் தேதி ராணுவ விமானம் மூலம் தப்பி சென்றார். அதன்பின் கோட்டபய ராஜபக்ச, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றடைந்தார்.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார்
தற்போது கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார். கோட்டபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட சமூக வருகை பதிவு காலாவதியானதால் வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய நிலையில் கோட்டபய ராஜபக்ச தாய்லாந்திற்கு செல்வதாக தகவல் வெளியானது.

அடைக்கலம் கொடுத்த தாய்லாந்து
சிங்கப்பூர் விசா இன்றுடன் நிறைவடைவதால் தாய்லாந்து அரசிடம் கோட்டபய ராஜபக்ச அடைக்கலம் கோரினார்.
இந்நிலையில், கோட்டபய ராஜபக்ச 90 நாட்கள் மட்டும் தாய்லாந்தில் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு.
இதற்கிடையில் இந்த 90 நாட்களுக்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என்று தாய்லாந்து அரசு நிபந்தனை விதித்துள்ளது.