கோட்டாபய அதிபர் பதவி விலகினால் சஜித் பிரேமதாசா பதவியேற்க தயார் - எம்.பி.லக்ஸ்மன் கிரியெல்ல
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்த நிலையில் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட துவங்கினர்.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ச வீடு மற்றும் எம்.பிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இதனிடையே பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் கண்டதும் சுட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதேச சபை தலைவர் வீட்டை முற்றுகையிட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்தனர்.
கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்காரர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய பதவி விலக எம்.பி.லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய விலகினால், பிரதமராக பதவியேற்க சஜித் பிரேமதாசா தயார் என்று தெரிவித்துள்ளார்.