‘‘ஊழலின் மையப்புள்ளி கோபாலபுரம்தான்’’ : திமுகவை குறிவைக்கும் ராதிகா
சீர்காழி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர்,திமுக, அதிமுக என மாறி மாறி கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
ஊழலும் நில அபகரிப்பு இவர்கள் ஆட்சியில் நடந்தது. ஆகவே உழைக்கும் மக்களே கொஞ்சம் சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், திமுக அதிமுகவை திருடன் என்று சொல்கிறது.

அதிமுக திமுகவை பரம்பரை திருடன் என்று சொல்கிறது .2006 இருந்து 2011 வரை என்ன நடந்தது என்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஊழல் தலைவிரித்து ஆடியது . தமிழகத்தில் எந்த ஊழல் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் மையப்புள்ளி கோபாலபுரத்தில் இருந்து தான் தொடங்கும்.
இப்போது அதை எல்லாம் மறந்துவிட்டு விடிவுகாலம் தருவோம் என்று கூறுகின்றனர் என பேசிய ராதிகா,இந்தியாவிலேயே ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதாதான்.
ஆனால், அதிமுக தற்போது டெல்லி தலைமைக்கு கைகட்டி வேலை செய்துவருவதாகவும் மாற்றத்திற்கு ஏற்ப நீங்களே சிந்தித்து வாக்களியுங்கள் என பேசினார்.