திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறிபோன தங்க சங்கிலி..மீண்டும் கிடைத்த அதிசயம்
திமுக பிரச்சார கூட்டத்தின் போது நடனமாடிய தொண்டரின் தங்க சங்கிலி பறிபோகி மீண்டும் கிடைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சென்னை ஆர்.கே நகரின் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த உதய நிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த போதை தொண்டர்கள் சிலர் தங்களுக்கே உரித்தான பாணியில் திமுக கொடியுடன் நடன புயல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பரதநாட்டியம், பிரேக் டான்ஸ், கதக்களி என கலக்கினர்..! மற்றொருபுரம் பெண் தொண்டர்களும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர் குடிபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி அவரது நடனத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் கழுத்தில் இருந்து கழண்டு விழுந்த நிலையில் அதனை சட்டை செய்யாத அந்த நடன புயலோ சுழன்று வீசிக் கொண்டு இருந்தது.
இதனை கவனித்த நல்ல உள்ளம் கொண்ட திமுக தொண்டர் ஒருவர் அந்த தங்க சங்கிலியை எடுத்து பத்திரமாக உரியவரின் கரங்களில் கொடுத்த போது தான், தன்னுடைய கழுத்தில் தங்க சங்கிலி இல்லாததையே போதை தொண்டர் உணர்ந்தார்.
வழக்கமாக அரசியல் திருவிழாக்கூட்டங்களில் மாயமாகிற நகைகள் மீண்டும் கிடைப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு, கையில் கிடைத்ததை கையோடு கொண்டு செல்லாமல் உரியவரின் ஒப்படைத்த அந்த உயர்ந்த உள்ளத்தை எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.