கோகுல்ராஜ் கொலை வழக்கில் வெற்றி அடைந்த வழக்கறிஞர் மோகனுக்கு பாராட்டு விழா
சேலத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார்.
இதனை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை ஆவணக் கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதனை தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், முதல் இரு குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதலாவது குற்றவாளி யுவராஜ் மற்றும் இரண்டாவது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுனர் அருணுக்கும் மூன்று ஆயுள் தண்டனை என ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி சம்பத்குமார்.
மேலும், குற்றவாளிகளான பிரபு , கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்த வழக்கறிஞர் மோகனுக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது.
ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடந்த இவ்விழாவில், வழக்கறிஞர் மோகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் மோகன் பேசுகையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது கோகுல்ராஜின் தாயார் முகத்தில் இருந்த புன்னகைக்கு ஈடு எதுவும் கிடையாது என்றார்.