காளி தேவி சிலையின் காலடியில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித தலை - அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் அருகே காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த கோவில் பூசாரி அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். காளி தேவி சிலையின் காலடியில் மனித தலை வைக்கப்பட்ட விதம் நரபலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை போலீசாருக்கு எழுப்பியுள்ளது. உயிரிழந்தவரை அடையாளம் காண 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
உடலின் எஞ்சிய பாகம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அந்த உடலை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேவரகொண்டா டிஎஸ்பி கூறியதாவது -
கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு 30 வயது இருக்கும். அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவரது தலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவி காட்சிகள் மூலம் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
தலை துண்டிக்கப்பட்ட நபரின் உடலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து உடலை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை பிடிக்கவும் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட தலை குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.