9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு,வார்டு வரையறை பணிகள் முடிவடையாதது காரணமாக 9 மாவட்டங்களில் தேர்தல் இதுவரை நடக்கவில்லை.
இதனிடையே விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.