திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன் - திவ்யா சத்யராஜ்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்தொகுதிக்கு ரூ.25,000 மற்றும் மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, இது தனது முதல் நேர்காணல் என்றும், நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுகக்கு யாரும் எதிரி இல்லை, வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும், திமுக மக்களுக்காக வேலை செய்யும் கட்சி என்றும், வாய்ப்பு கிடைத்தால் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவேன் என்றார்.
5 ஆண்டுகளாக தொண்டு நிறுவனத்தின் மூலம் மக்கள் சேவையில் இருப்பதாகவும், சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, திமுகவிற்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
மேலும், தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.