காதலன் இறப்பை தாங்க முடியாத காதலி விஷம் குடித்து தற்கொலை
கோவை அருகே காதலன் இறப்பை தாங்க முடியாமல் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பார்த்தினி (19).
இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, பார்த்தினிக்கும், கல்லூரியில் உடன் படித்துவந்த உடுமலையை சேர்ந்த ரமேஷ்ஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் ரமேஷ் திடீரென உயிரிழந்தார்.
இதனால் பார்த்தினி மிகவும் மனமுடைந்து யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்தினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகப்பட்டு கதவை தட்டியுள்ளனர். உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பார்த்தினி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பார்த்தினியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பார்த்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கைப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.