எவ்வளவு முயன்றும் பேச மறுத்த காதலன் - நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண்கள்!
காதல் விவகாரத்தில் இளைஞரை, பெண்கள் தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் விவகாரம்
சென்னை, நெசப்பாக்கத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவரும் அசோக் நகரில் வசித்து வரும் தச்சுத் தொழிலாளியான 21 வயது இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
தொடர்ந்து அந்தப் பெண் போனில் அழைத்தும் அவரது காதலன் பேச மறுத்துள்ளார். இந்நிலையில் இளைஞர் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இளைஞர் மீது தாக்குதல்
இதையறிந்த காதலி தனது 19 வயது தங்கையுடன் அங்கு சென்று, பேசாதது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆத்திரமடைந்த காதலி அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து காதலனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், நிலை குலைந்த காதலன் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். உடனே இளைஞரை அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.