நீட் தேர்வோடு வாழ்க்கை தேர்வையும் எழுதிய மாணவி - காதலனோடு திருமணம்
நாமக்கல் அருகே காணாமல் போன மாணவி திருமணமான நிலையில் வாலிபருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்த அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த செந்தில் பாண்டியன் - தங்கம் தம்பதிக்கு ஸ்வேதா என்ற மகளும் மற்றும் ஒரு மகனும் உள்ளார். செந்தில் பாண்டியன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மகள் ஸ்வேதா ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி பெற்று வந்தார். இதனிடையே திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 12 ஆம் நடந்த நீட் தேர்வினை எழுதியுள்ளார்.
தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சோகமாக வந்த ஸ்வேதாவை வீட்டில் இருப்பவர்கள் தேற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற ஸ்வேதா வீடு திரும்பவில்லை.
தோழியிடம் விசாரித்ததில் ஸ்வேதா அங்கு வரவில்லை என்று தெரிய வந்தது. இதனையடுத்து பல இடங்களில் தேடி பார்த்த உறவினர்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் தனிப்படை அமைத்து பல மாவட்டங்களில் ஸ்வேதாவை தேடி வந்த நிலையில் ஸ்வேதா தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் கழுத்தில் தாலியுடன் வாலிபர் ஒருவருடன் தஞ்சமடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது உறவுக்கார பட்டதாரி இளைஞரை ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், வீட்டில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் திண்டுக்கல் சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.