‘விடாதீங்க... என் சாவுக்கு இவர்தான் காரணம்...’ - விஷம் குடித்து வீடியோவை வெளியிட்ட பெண் - பரபரப்பு சம்பவம்
காதலித்து தன்னை ஆட்டோ ஓட்டுனர் ஏமாற்றி விட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷம் குடித்த நிலையில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், சதீஷ் என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் உறவினருக்கும், ஊர்மக்களுக்கும் தெரியவந்தது.
இதனையடுத்து, காதலியை சதீஷ் புறக்கணித்து வந்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த பெண் காதலித்த போது, இருவரும் நெருக்கமாக இருந்த ஆதாரங்களை எடுத்து சென்று, போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தனக்கு நியாயம் கேட்டு சதீஷ் வீட்டுக்கு நேரடியாகச் சென்றுள்ளார் அப்பெண்.
அங்கு சதீஷின் உறவினர்கள் அப்பெண்ணை அடித்து துரத்தியுள்ளனர். சதிஷ் வீட்டிற்கு முன்பு, அப்பெண் தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று எண்ணி, விஷம் குடித்த அப்பெண், தனது வாக்குமூலத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, போலீசார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷம் குடித்த அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.