‘வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது’ - ரயில் நிலையத்தில் போலீஸார் முன்பு நடனமாடி பங்கம் செய்த இளம்பெண்
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மாஸ்க் அணியாத இளம்பெண் ஒருவருக்கு டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் சேர்ந்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக அந்தப் பெண் போலீஸார் முன்பே பிளாட்பாரத்திலேயே நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் மாஸ்க் அணிதஅடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகின்றன.
குறிப்பாக ரயில் நிலையங்களிலும் ரயில்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அபராதம் விதிக்கும் பணியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர், மாஸ்க் அணியாமல் நின்றுக் கொண்டிருந்தார்.
உடனே டிக்கெட் பரிசோதகர், அவரிடம் மாஸ்க் அணியாததற்காக 500 ரூபாய் அபராதம் விதிப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவிக்க போலீசாருக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அந்த பெண் பிளாட்பாரத்திலேயே ``சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் ``அதிகார திமிற வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரிகளை பாடி நடனமாட தொடங்கினார் .பின்னர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் பொதுமக்களும் அந்த இளம்பெண்ணை சமரசப்படுத்த முயன்றனர் ஆனால் அந்த இளம்பெண்ணோ, போலீஸாருடன் சண்டைப் போட்டபடியே இருந்தார்.
அதைப் பார்த்த டிக்கெட் பரிசோதகரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் யோசிக்க அபராத தொகையை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் இந்த நிலையில் மாஸ்க் போடாததற்காக இளம்பெண் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.