ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு உதவும் ஜெர்மனி - புதினுக்கு புதிய சிக்கல்
ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட ஜெர்மனி நாடு உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ள ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உக்ரைன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு முடிந்த அனைத்தையும் செய்வது தங்கள் கடமையாகும் என கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் உட்பட மோதல் பகுதிகளுக்கு பயங்கர ஆயுதங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற கொள்கையை பின்பற்றி வந்த ஜெர்மனி அதிலிருந்து விலகி பாதுகாப்புக்காக 5 ஆயிரம் ஹெல்மெட்டுகள் மற்றும் மருத்துவ உதவிகள் மட்டுமே முன்பு வழங்கிய நிலையில், தற்போது 14 கவச வாகனங்கள் மற்றும் 10,000 டன் எரிபொருளை உக்ரைனுக்கு அனுப்புவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.