ஜெர்மனி ஊடகவியலாளரைத் தேடிய தலிபான்கள் அவரின் உறவினரைக் கொன்றது அம்பலம்

afghanistan
By Fathima Aug 20, 2021 04:50 PM GMT
Report
Courtesy: TheHindu

ஜெர்மனி ஊடகவியலாளருக்கான தேடுதல் வேட்டையில் இறங்கிய தலிபான்கள் அவர் இல்லாததால் அவரின் உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு மற்றொருவரை படுகாயப்படுத்திச் சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தங்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானைக் கொண்டுவந்த தலிபான்கள் தாங்கள் 1996ல் இருந்ததுபோல் இப்போது இல்லை என்று சுய விளம்பரம் செய்தனர். ஆனால், அங்கே தலிபான்கள் பழைய பாணியிலேயே பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டின் டட்ஷே வெல் (Deutsche Welle) பத்திரிகையின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக ஏறி பத்திரிகையாளர்கள், அமெரிக்க, நேட்டோ படை ஆதரவாளர்கள், தூதரக ஊழியர்கள் என அனைவரையும் தேட ஆரம்பித்துவிட்டனர்.

எங்கள் பத்திரிகையைச் சேர்ந்த நிருபரை அவர்கள் நீண்ட காலமாக தேடி வருகின்றனர். அவர் தற்போது ஜெர்மனியில் பணியில் உள்ளார். இந்நிலையில், அவரைத் தேடிச் சென்ற தலிபான் தீவிரவாதிகள் அவர் அங்கு இல்லை என்பதால் அவருடைய உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்துள்ளனர்.

இது மிகவும் துயரமளிக்கும் செய்தி. இந்தச் சம்பவம் எங்கள் பத்திரிகையாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆப்கானிஸ்தானில் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. தலிபான்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இனி நேரமில்லை. அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

டட்ஷே வெல் (Deutsche Welle) பத்திரிகை உட்பட ஜெர்மன் நாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரையும் துரிதமாக மீட்கும்படி அந்நாட்டு அரசுக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து முழுமையாக 5 நாட்கள் ஆகிவிட்டன. தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள்.    

ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. சார்பாக நார்வேஜியன் சென்டர் ஃபார் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.