“ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ராஜதந்திரத்துடன் செயல்படுகிறது” - ஜெர்மன் தூதர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 11 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 11 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைய வைத்து வருகிறது ரஷ்யா.
நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை வெறிக் கொண்டு நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றனர்.
ஆனால் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையே வகித்து வருகிறது. ஐ.நா. அமைப்பில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதில் இருந்து இந்தியா ஒதுங்கியது.
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷிய போர் நெருக்கடியில் சர்வதேச அமைப்பில் இந்தியாவின் நிலை இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் பேசுகையில்,
“இந்தியா சிறந்த ராஜதந்திர சேவையுடன் செயல்படுகிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். இது உக்ரைனையோ அல்லது ஐரோப்பிய யூனியனையோ அல்லது நேட்டோவை பற்றியது அல்ல.
சர்வதேச உறவுகளை பற்றியது. நாம் அனைவரும் புதினுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். வேண்டாம், இதனை நிறுத்துங்கள் என புதினிடம் எடுத்துரைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.