இன்று +2 பொதுத்தேர்வு : மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டியவை என்னென்ன?

By Irumporai May 05, 2022 03:00 AM GMT
Report

பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கிறது.

இந்த தேர்வு வரும் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் , தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றி தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செய்து இருக்கிறது. கொரோனா தொற்றை பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெற இருக்கிறது. அடுத்ததாக வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆங்கில தேர்வு நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடக்க உள்ளது. 

இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும். 10.15-க்கு மணி ஐந்து முறை அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.

1.10க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்து,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும்(மே 6 ஆம் தேதியும்),பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.மேலும்,10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.