"விராட் கோலி செய்தது உண்மையில் கேவலமான செயல், இந்திய அணியின் கேப்டன் செய்யும் வேலையா இது?" - கவுதம் கம்பீர் கடும் கண்டனம்

virat kohli rahul dravid 3rd test india vs sa gautam kambir
By Swetha Subash Jan 14, 2022 06:43 AM GMT
Report

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, டிஆர்எஸ் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெம்ப்பில் இருந்த மைக் அருகே சென்று பேசியதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

212 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க விளையாடி வருகிறது. மார்க்ரம் விக்கெட்டை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார்.

அடுத்தடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பந்துவீசினர். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஸ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார்.

அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதற்கு களநடுவர் எராஸ்மஸ் அவுட் வழங்கினார். ஆனால், கேப்டன் எல்கர் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார்.

இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. களநடுவர் எராஸ்மஸ் இம்பாசிபில் எனச் சொல்லி சிரித்துக்கொண்டார்.

இதையடுத்து, வீரர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோஃபோனில் கேட்கும்போது, வீரர்கள் தங்கள் அதிருப்தியையும் இதில் பதிவு செய்தனர்.

இதில் உச்ச கட்டமாக கே.எல்.ராகுல் '11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது' என்றார். ' ஒளிபரப்பாளர்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறார்கள்,' என்று கோபத்தில் தெரிவித்தனர்.

அஸ்வின் கூறுகையில் ' சூப்பர்ஸ்போர்ட் நிறுவனம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு வேறு ஏதாவது சிறந்தவழி இருக்கிறதா எனப் பார்க்கலாம்' எனத் தெரிவித்தார்.

கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக்ரோன் அருகே சென்று ' உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள்.' எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டெம்ப் மைக் அருகே சென்று கோபமாகப் பேசியதை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து, கண்டித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசியதாவது:

“விராட் கோலி செய்தது உண்மையில் கேவலமான செயல். ஸ்டெம்ப் அருகே சென்று, அதுபோன்று பேசலாமா, முதிர்ச்சியற்றவர் போல் நடந்து கொண்டார்.

ஒரு சர்வதேச அணியின் கேப்டனிடம் இருந்து யாரும் இதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை, அதிலும் இந்திய அணியின் கேப்டன் செய்யும் வேலையா இது.

தொழில்நுட்பம் என்பது உங்கள் கையில் இல்லை என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும், லெக் செட் பந்து விக்கெட் கீப்பர் பிடித்தபோது, தென் ஆப்பிரிக்க வீரர்கள் அப்பீல் செய்தபோது நீங்களும் இப்படித்தானே நடந்து கொண்டீர்கள்.

அப்போது, எல்கர் உங்களைப் போல் நடந்து கொள்ளவில்லை. கோலியின் செயல்பாடு குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஏதாவது கருத்துக்கூற வேண்டும்.

கோலி என்ன பேசினாலும் சரி, அவர் இதயத்தை எடுத்துவைத்து விளையாடினார் என்றாலும் சரி, அவரின் செயல்பாடு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது, ஒருபோதும் கோலியால் முன்மாதிரியாக இருக்க முடியாது.

வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இந்த செயலை பார்க்க விரும்பமாட்டார்கள்,குறிப்பாக கோலியின் செயலைப்பார்க்க விரும்பமாட்டார்கள்.

டெஸ்ட் போட்டியில் என்ன முடிவு வேண்டுமானாலும் வரட்டும், இந்திய அணியை நீண்டகாலம் வழிநடத்திச் சென்ற ஒரு கேப்டனிடம் இருந்து இதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை.

இதுபற்றி ராகுல்திராவிட், கோலியிடம் பேசுவார் என நம்புகிறேன். ஏனென்றால் திராவிட் கேப்டனாக இருந்தபோது, இதுபோன்று ஒருபோதும் நடந்து கொண்டதில்லை” என கம்பீர் தெரிவித்தார்.