பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை : கியாஸ் விலை ரூ.13,680-ஆக உயர்வு ; மக்கள் தவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கடும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
டீசலுக்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்காக பல மணிநேரம் கொளுத்தும் வெயிலில் நிற்கிறார்கள் அப்பாவி மக்கள்.
டீசல் இல்லாமல் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வழியின்றி பயிர்கள் வீணாகும் நிலைக்கு விவாசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அதே போல் பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது.
பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள். ரொட்டிக்கும், பாலுக்கும், காய்கறிக்குமாக குடும்பம் குடும்பமாக தவிக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது சமையல் கியாஸ் விலை அங்கு ரூ.13,680 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.869-க்கும், ஒரு முட்டை விலை ரூ.102-க்கும் விற்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ அரிசி ரூ.650 முதல் ரூ.718-வரைக்கும், சிவப்பு அரிசி கிலோ ரூ. 684-க்கும், கோதுமை மாவு கிலோ ரூ.752-க்கும் விற்கப்படுகிறது.