காந்தி ஜெயந்தி : டெல்லியில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினம்
மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. புதுடெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
குடியரசு தலைவர் அறிக்கை
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
காந்தி ஜெயந்தி என்பது, அமைதி, சமத்துவம், மதநல்லிணக்கம் மற்றும் காந்தியடிகளின் எழுச்சியூட்டும் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு நாம் அனைவரும் நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.