இந்திய அணியில் இரண்டு சீனியர் வீரர்கள் நீக்கம் - வாய்ப்பை தட்டிப்பறித்த இளம் வீரர்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயருக்கு ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய ஹசாரே தொடர் நிறைவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் சிலருக்கு தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றும், ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.