அணுஉலை கழிவுகளை கடலில் கொட்டவுள்ள ஜப்பான்: எதிர்க்கும் சீனா காரணம் என்ன?
ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் கொட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது இதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுகத்தத் தொடர்ந்து, அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அதோடு மிக முக்கியமான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.
இதனால் அப்பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்நிலையில், புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
அதன்படி புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு கடலில் திறந்து விட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
இதனை ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய ஜப்பான் பிரதமர்யோஷிஹைட் சுகா அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றும்பணி ஓரிரு நாட்களில் முடியக்கூடியது அல்ல. அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும்.
அதே சமயம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்த பிறகே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என கூறினார். ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை அனுமதிஅளித்துள்ளது.
அமெரிக்காவும் ஜப்பானின் இந்தமுடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து ஜப்பான் இந்த பணிகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால், உள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும், அது மனிதர்களின் மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜப்பானின் இந்த நடவடிக்கையினை சீன அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது ஜப்பான் அணுகழிவினை கடல் நீரில் கலந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு அண்டை நாடான தென்கொரியாவும் எதிர்பை பதிவுசெய்துள்ளன இந்த முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இந்த முடிவை உடனடியாக ஜப்பான் திரும்பப் பெற வேண்டும் எனவும் இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.