எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு: விரைவில் இணைய சேவை பாதிக்கும் அபாயம்!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் இடம்பெற்றுவரும் போரின் எதிரொலியாக பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம், எரிபெருள் விநியோகம் என்பன தடைப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் செல்போன் வலையமைப்புகள் மற்றும் இணைய சேவைகள் வெகு விரைவில் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்கள் தடைப்பட்டுள்ளது.இதன் விளைவாக கடந்த மூன்று நாள்களாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
தொடர்ந்து, ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டு உபயோகத்துக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
தட்டுப்பாடு காரணமாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

இதனால், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை (டவர்) தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் படிப்படியாக டவர் தயாரிப்புகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டவர் தயாரிப்புக்கு எரிவாயு தேவை ஏன்?
தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல உலோக செயலாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
உலோகத்தை சூடாக்கவும், கோபுரங்களின் பாகங்கள் துரு மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்க பூச்சு பூசுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு எரிவாயு அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்றது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில், டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி, எல்என்ஜி வகை எரிவாயுகளை சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்வெட்டு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. கோடைக் காலம் நெருங்குவதால் மின்வெட்டு அபாயமும் எழுந்துள்ளது.
இந்தநிலை தொடரும் பட்சத்தில், தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டால் செல்போன் வலையமைப்புகள், இணைய சேவைகளை சீராக தொடருவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கு தேவையான டீசலையும் சீராக விநியோகிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.