சுற்றுலா வந்த இடத்தில் முளைத்த காதல்: பீகார் காதலனை கரம் பிடித்த பிரான்ஸ் பெண்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவரை பிரான்ஸ் நாட்டுப் பெண் காதலித்து திருமணம் செய்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் நகரில் சொந்தமாக தொழில் செய்து வரும் மேரி என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளார். அப்போது பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மாவட்டத்தின் கதாரியா கிராமத்தை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான ராஜேஷூடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சந்தித்தபோது ராஜேஷ் டெல்லியில் வசித்துள்ளார். சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் திரும்பிய பிறகும் மேரி தொடர்ந்து ராஜேஷ் உடன் பேசி வந்துள்ளார். மூன்று வருடத்திற்கு பிறகு தன்னுடன் பாரிஸ் வந்து இருக்குமாறு சொல்ல உடனடியாக ராஜேஷ் பிரான்ஸ் சென்றார்.
அங்கு இருவரும் இணைந்து தொழில் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கினர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தன் குடும்பத்துடன் வந்த மேரி ராஜேஷை பீகாரில் இந்திய வழக்கப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் மணமக்கள் இருவரும் தங்கள் இல்வாழ்க்கையை இனிதே தொடங்கி உள்ளனர்.
அவர்களது திருமண நிகழ்வு படங்களை சமூக வலைதளம் மூலம் பார்த்து தெரிந்துக் கொண்ட நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.