தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு நேர்ந்த சிக்கல் - அமைச்சருக்கு நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே தமிழக மீன்வளத் துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அந்த சமயம் வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருந்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.இதைத்தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிந்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இதில் தற்போது 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய சொத்துக்கள், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்துக்கள் என சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழக அமைசசருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.