திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் : 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி
திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்திருந்த நிலையில்,
தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக இங்கு தரிசனம் செய்ய நடுவில் சில காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் இன்று காலை 9 மணி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
முதலில் 10,000 பேர் மட்டுமே இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 30,000 பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வருகின்றனர்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் கூடுதலாக 10,000 பேர் என மொத்தம் 40,000 பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையானை தரிசிப்பதற்கான தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என இருக்க வேண்டும்.
மேலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையை கொண்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.