கரூரில் 3 வேளையும் வீடு தேடி வரும் இலவச உணவு திட்டம் தொடக்கம்...
கரூர் மாவட்டத்தில் ஏழை,எளிய மக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் பலர் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு, தனியார் நிறுவனம், தன்னார்வ அமைப்புகள் மூலமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கரூரில் உணவு தேவைப்படுவோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தை 9498747614, 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இன்று தொடங்கி வைத்தார். இன்று ஒரே நாளில் 3,307 நபர்கள் உணவு தேவை என்று தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.