அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி : சிக்கலில் ஓ.எஸ். மணியன்.. உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்துள்ளனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர் தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி கல்வித் துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய ஹரிநாத் தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் ஆகியோர் அடங்குவர்.
இந்த முப்பது மோசடி நபர்களும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் ஏமாற கூடாது என்றும், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-28447701, 28447703(( Fax), 9498105411( WhatsApp) மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை 044 -23452359, சென்னை காவல் பொது மக்கள் குறை தீர்க்கும் பிரிவு 044- 23452380 ஆகியவற்றை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் டிஜிபி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.