ஜெர்மனியை உலுக்கும் கடும் பனிப்பொழிவு: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு
ஜெர்மனி மற்றும் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய விமான நிலையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஃப்ராப்போர்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த விமான நிலையத்தில், ஓடுபாதைகளில் பனி அதிக அளவில் தேங்கியதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளின் பின்னர் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் தேசிய வானிலை சேவை (DWD) விமான நிலையம் அமைந்துள்ள ஹெஸ்ஸின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் மாற்றம் பயணிகளிடையே பெரும் குழப்பநிலையையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஓடுபாதைகள், விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேங்கிய பனியை அகற்றும் பணிகள் அவசரமாக தொடங்கப்பட்டுளது என விமான நிலைய நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பிராங்க்பர்ட் வழியாக பயணம் செய்ய இருப்பவர்கள், வானிலை முன்னறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும் எனவும், விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு எச்சரிக்கை
புறப்பாடு மற்றும் தரையிறக்கத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய ஓடுபாதைகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும், முழுமையான இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்பதால், விமான நிலைய அதிகாரிகள் இன்று முழுவதும் தாமதங்கள் தொடரக்கூடும் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் சேவை பாதிப்பு
பனிப்பொழிவு, மற்றும் பனிப்புயல் காரணமாக நீண்ட தூர ரயில் சேவைகள், குறிப்பாக வடக்கில், பெரிதும் பாதிக்கப்பட்டன, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளி மூடல்கள் செயல்படுத்தப்பட்டன.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் மட்டும், திங்கட்கிழமை 5,400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.