நகைக்காக 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்துவைத்த பெண் - அதிர்ச்சி தகவல்

kanyakumari childwasmurderforjewel
By Petchi Avudaiappan Jan 22, 2022 06:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கன்னியாகுமரியில் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜான் ரிச்சார்ட் என்பவர்  வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சகாய சில்ஜா, மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனிடையே  சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். அதனையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்து அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடிய போது பீரோவும் உடைந்தது. அதில் அந்த சிறுவன் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதைக்கண்ட அவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.