தஞ்சாவூரில் கொத்தடிமைகளாக விற்கப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு - பொதுமக்கள் பாராட்டு
தஞ்சை அருகே 62,000 ரூபாய்க்கு செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை வல்லம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி பாப்பாத்தி. இருவரும் கறி புகை மூட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் நான்கு மகன்களுடன் சுந்தர்ராஜன் வசித்து வருகிறார்.
இதனிடையே ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. கோவிந்தராஜ் அவரது அண்ணன் மணிராசு, மைத்துனர் செல்வம் ஆகியோருடன் அங்கேயே உரத்திற்காக செம்மறி ஆடு மேய்த்து வந்துள்ளார்.
கரிப் புகை மூட்டும் வேலையில் போதுமான வருமானம் இல்லாததால், தனது நான்கு மகன்களையும் கோவிந்தராஜிடம் 62,000 ரூபாய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு, ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமைகளாக விட்டுள்ளார்.
அவர்கள் தஞ்சை மன்னார்குடி பிரிவு சாலை சூரக்கோட்டை அருகே சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த சமூகஆர்வலர் 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சைல்டுலைன் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் தாலுகா காவல் துறையினர் நான்கு சிறுவர்களையும் மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் கூட்டிச் சென்று சேர்த்தனர்.