பதிவை படிக்காமல் எப்படி ஃபார்வர்ட் செய்தீர்கள்?...எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,நடிகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் தனது கட்சிக்காரருக்கு மெசேஜ் அனுப்புபவர் என்பதால்,அந்த செய்தியாக இருக்கும் என்று நினைத்து அவர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ல் எழுதியதை ஃபார்வர்ட் மட்டுமே செய்ததாக கூறினார். தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறினாலும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில்,நடிகர் எஸ்.வி சேகர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்,மேலும்,அவதூறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டல் சரியாகி விடுமா? என்று நீதிபதி நிஷா பானு அவர்கள் கேள்வி எழுப்பி,வழக்கை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு,ஒருவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.