மீண்டும் சிக்கலில் ராஜேந்திர பாலாஜி : லஞ்ச ஒழிப்புத்துறை திடுக்கிடும் தகவல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்துசேர்த்துள்ளார் என தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மகேந்திரன் இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர்.
பின்னர், இந்த வழக்கு தற்போது நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி தற்போது விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்துக்கள் இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.