காங்கிரசில் இணைந்தார் தமிழக முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி!
தமிழக முன்னாள் தீயணைப்புத்துறை டிஜிபியாக பணியாற்றிய பிரஜ் கிஷோர் ரவி காங்கிரசில் இணைந்துள்ளார்.
முன்னாள் டிஜிபி
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக பணியாற்றியவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரஜ் கிஷோர் ரவி. இவர் கடந்த செப்டெம்பர் மாதம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் அவர் காங்கிரசில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார் பிரஜ் கிஷோர் ரவி. டெல்லியில் உள்ள கட்சி தேசிய அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது
இதில் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சையத் நசீர் உசேன் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகிலேஷ் பிரசாத்சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரசில் இணைந்தார்.
இதனையடுத்து பேசிய பிரஜ் கிஷோர் "நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது ரத்தத்திலேயே அது ஊறிப்போய் இருக்கிறது. எனது அரசியல் பிரவேசம் தேசிய அளவில் இருக்கும். பீகாரிலும் இருக்கும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்கும்" என அவர் தெரிவித்தார்.